பணியிட மாறுதல்


ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் பணியிடமாறுதல் என்பது அவ்வப்போது நடைபெறும் ஒரு சாதாரண அலுவலக நடைமுறைதான் என்பது பொதுவாக அனைத்து அரசு ஊழியரும் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் பணியிடமாறுதலிலும் பல வலிகள் இருப்பதை அறியமுடிகிறது இல்லை இல்லை உணர முடிகிறது ஒருசில நேர்வுகளில். உண்மையில் பணியிடமாறுதலில் பல நெகிழ்ச்சியான, உணர்வு பூர்வமான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இது பற்றிய ஒரு தகவல்தான் இந்த பதிவு. 



வேலூர் வனக்கோட்டம், அமிர்தி வனச்சரகத்தில் சில ஆண்டுகளாக ஒன்றாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அவர்களது சொந்த விருப்பத்தின்பேரில் பணியிடமாறுதல் பெற்றனர். அவ்வாறு பணியிடமாறுதல் கிடைத்தது அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகத்தான் இருந்தது. ஆனால் பணியிடமாறுதலுக்கான ஆணையை பெற்றதும் அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை உணரமுடிந்தது. ஆரம்பத்தில் அதற்கான காரணம் இன்னதென்று தெரியவில்லை. ஆனால் நேரம் செல்லச்செல்ல அவர்களால் உணரமுடிந்தது. ஆம் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டு ஒன்றாக பயணித்தது அவர்கள் நெஞ்சில் நிழலாடியது. அவர்களுக்குள் அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டதும் அவை கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல்களாய் மறைந்துபோனதும் அவர்களது பிரிவு உபச்சார விழாவில் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தது. யாருக்கும் எதுவும் நிரந்தரம் இல்லை ஆனால் அனைவருக்கும் அன்பு நிரந்தரமானது என்பதையும் அங்கே காணமுடிந்தது.

ஒருவரை ஒருவர் ஒவ்வொரு சூழலிலும் பிரிந்த செல்கிறோம். பிரிவு என்பதே உறவுக்காகத்தான் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது. இங்கிருந்து பிரிந்தாலும் வேறு ஒரு புதிய உறவு செல்லும் இடத்தில் உருவாகும் அன்பை உள்ளத்தில் வைத்திருப்பவர்களுக்கு. நாம் என்ன சாதித்தோம் நாம் என்ன சம்பாதித்தோம் என்பதை பிரிவு ஏற்படும்போது கண்ணால் காணமுடிகிறது, மனதால் உணரமுடிகிறது. ஒருவரை ஒருவர் விட்டு பிரியும்போது ஒருதுளி கண்ணீர் வருகிறதே அங்கே தெரியும் உங்கள் அன்பு. ஆண் பிள்ளைகளை அழக்கூடாது என அடிக்கடி நாம் சொல்லி வளர்ப்பதால் அவர்களுக்கு கண்ணீர் வந்ததில்லை பொதுவாக பிரிவின்போது என்பதை உணரமுடிந்தது. ஆனால் பெண்களோ தங்களது பிரிவை கண்ணீரால் காண்பித்துவிடுகின்றனர். இவ்வாறான சூழ்நிலைகளை விவரிக்க முடியாது அவை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும். 

தமிழரின் பண்பாடு விருந்தோம்பல். விருந்தோம்பலோடு நிறைவுபெறவேண்டும் எண்ணி அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது அன்பு கலந்து. அனைவரும் உண்டு மகிழ்ந்தோம், வயிறு நிறைந்தது மனம் தான் வெறுமையாக இருந்தது.

..


No comments:

Post a Comment