கல்வராயன் மலை

கல்வராயன் மலைகள் தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் உள்ளது. இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி ஆகும். பச்சைமலை, ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. 1095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2000 முதல் 3000 அடி வரை உள்ளது.

கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடபகுதி 'சின்னக் கல்வராயன்' என்றும் தென்பகுதி 'பெரிய கல்வராயன்' என்றும் குறிப்பிடப்படுகின்றது. 'சின்னக் கல்வராயன்' மலைகள் சராசரியாக 2700 அடி உயரமும், 'பெரிய கல்வராயன்' மலைகள் சராசரியாக 4000 அடி உயரமும் கொண்டவை.

கல்வராயன்மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் கோமுகி அணையும், அதையொட்டி அழகிய பூங்காவும் உள்ளது. கல்வராயன் மலையில் மேகம், பெரியார், கவியம் அருவிகள் காணப்படுகின்றன. கரியாலூரில் மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, படகு குழாம் வனத்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் சிறுவர் பூங்காவும் உள்ளது. கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வனத்துறையினர் விடுதிகள் அமைத்திருக்கின்றனர். அங்கு தங்க முன் அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும். இல்லை என்றால் காலையில் சென்று, மாலையில் திரும்பலாம்.
கல்வராயன் மலையை ஆண்டவர்களின் வரலாறு

பெரியண்ணன், சின்னண்ணன், குறும்பகவுண்டன், சடையகவுண்டன் மற்றும் அரியகவுண்டன் ஆகிய ஐந்து சகோதரர்களும் இம்மலையினை சமமாக பிரித்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இம்மலையானது ஜாகீர்தார்கள் மற்றும் ஜமீன்தாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 1976 இல் இம்மலைப்பகுதி ஜாகீர்தாரர்களிடமிருந்து அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. கல்வராயன் மலையானது 1980 ஆம் ஆண்டு முதல் கள்ளக்குறிச்சி வனக்கோட்டத்தின் நிர்வாகத்தில் இருந்து வந்தது. 2018 முதல்  விழுப்புரம் வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதால் கள்ளக்குறிச்சி வனக்கோட்டம் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளது.


No comments:

Post a Comment