வனத்துறை அலுவலர்களின் செயல்பாடுகள்

மக்களின் அத்தியாவசிய துறைகளில் ஒன்று வனத்துறை ஆகும்.
தமிழ்நாடு அரசுத்துறைகளில் வனத்துறையின் செயல்கள் பாராட்டத்தக்கதாகவே உள்ளது. மக்கள் உயிர்வாழ தேவையான காற்றை (ஆக்சிஜன்) உற்பத்தி செய்வது மரங்கள். அந்த மரங்களை பாதுகாக்கும் பொறுப்பு வனத்துறையையே சாரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

வனத்துறை என்பது மரங்களை மட்டும் பாதுகாப்பது மட்டுமல்லாது வனத்திலுள்ள உயிரினங்களையும் பாதுகாத்து வருகிறது. மக்கள் மட்டுமே வாழ இவ்வுலகம் படைக்கப்படவில்லை. இவ்வுலகம் அனைத்து வகையான உயிரினங்களும் வாழ படைக்கப்பட்டது. எனவேதான் அரசு மற்றும் உலக நாடுகள் பல்லுயிர் பாதுகாப்பு என்ற ஒன்றை வலியுறுத்துகின்றன. இதற்காகவே பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் 2002 (Biological Diversity Act 2002) இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மலைப்பிரதேசங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மலைகளில் கல்வராயன் மலையும் ஒன்றாகும். 

கல்வராயன் மலைகள் தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் உள்ளது. இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி ஆகும். பச்சைமலை, ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. 1095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2000 முதல் 3000 அடி வரை உள்ளது.

கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடபகுதி 'சின்னக் கல்வராயன்' என்றும் தென்பகுதி 'பெரிய கல்வராயன்' என்றும் குறிபிடப்படுகின்றது. 'சின்னக் கல்வராயன்' மலைகள் சராசரியாக 2700 அடி உயரமும், 'பெரிய கல்வராயன்' மலைகள் சராசரியாக 4000 அடி உயரமும் கொண்டவை ஆகும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கல்வராயன் மலைகள் உள்ளது. இது காராளன் என்றழைக்கப்படும் மக்களின் பூர்வீக வாழ்விடமாகும். இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் வரையும், மேற்குப்பகுதி சங்கராபுரம் வரையும், வடதிசையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வரையிலும் பரவியுள்ளது.

கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன. கல்வராயன்மலையைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகள் வடமேற்கு பருவக்காற்றின் மூலமாக மழையைப்பெறுகிறது. கோமுகி ஆறு இம்மலையில் உற்பத்தியாகி காவிரிக்கு இணையாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது. இந்த மலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் காணப்படுகிறது. இந்த மலையின் மேற்கே சேலம், தருமபுரி மாவட்டம், கிழக்கே விழுப்புரம் மாவட்டம் மற்றும் வடக்கே திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன.

கல்வராயன்மலையின் அடிவாரத்தில் மலைகளுக்கிடையில் கோமுகி அணையும், அதையொட்டி சுமார் 15 ஏக்கர் அளவில் அழகிய பூங்காவும் அமைந்துள்ளது. பூங்காவில் பயணிகள் இளைப்பாறவும், கழிப்பிடம் செல்லவும் தனி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேகம், பெரியார், பண்ணிப்பாடி போன்ற அருவிகள் காணப்படுகின்றன. குளியலறை வசதிகளும் அருவிக்கு அருகில் செய்யப்பட்டுள்ளன.மலையில் உள்ள ஓடைகளின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, படகு குழாம் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று வர தேவையான வசதிகள் வனத்துறையினரால் செய்யப்பட்டுள்ளது.  காட்டுப் பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைக் காணும் வாய்ப்பும் கிடைக்கலாம். கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் வசதிக்கு ஏற்ப, வனத்துறையினர் விடுதிகள் அமைத்து முறையாக பராமரித்து வருகின்றனர். ஒரு நபர் முதல் 50 க்கும் மேற்பட்டோர் தங்கும் வசதியினை வனத்துறையினர் அமைத்துள்ளனர். அங்கு தங்க முன் அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும். இல்லை என்றால் காலையில் சென்று, மாலையில் திரும்பலாம்.

கல்வராயன் மலைக்கு அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் விழுப்புரம் மற்றும் சின்னசேலம் தொடர்வண்டி நிலையங்கள் ஆகும், அங்கிருந்து பேருந்தில் கல்வராயன் மலை செல்லலாம். கள்ளக்குறிச்சியிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி அரசால் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வராயன் மலையில் உள்ள வனத்துறையினரின் செயல்பாடுகள் பற்றிய ஒரு பத்திரிக்கை செய்தி






No comments:

Post a Comment