காடு (வனம்) பொருள் விளக்கம்


காடு ( வனம்) என்றால் என்ன? 
அதாவது வனம் என்பதன் விளக்கம் மற்றும் பொருள் என்று பார்த்தால் சரியான எந்தவொரு விளக்கமும் இல்லை. காடுகள் என்பதற்கான பொருள் விளக்கம் தமிழ்நாடு வனச்சட்டத்திலோ அல்லது இந்திய வனச்சட்டத்திலோ தரப்படவில்லை. வனங்கள் சம்பந்தப்பட்ட சட்டங்களை ஒருங்கிணைப்பதையே  சட்டத்தின் பெயர் குறிக்கின்றது. பொருள் விளக்கம் தரும் கூறும் (Interpretation clause) "வனம்" என்பதற்கான விளக்கத்தை கொடுக்கவில்லை. நாக்பூர் உயர்நீதிமன்றத்தின் முழுநீதிப்பேராயம் (Full bench) ஒரு வழக்கிலே வனம் என்பதற்கான விளக்கம் வனச்சட்டத்தில் எந்த பகுதியிலும் தராத காரணத்தால் அகராதியில் சொல்லப்பட்ட விளக்கத்தையே எடுத்துக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

காடுகள் என்பதற்கு பின்வரும் விளக்கத்தினை சுருக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு அகராதி தருகின்றது.
1. மரங்கள் மற்றும் புதர்க்காடுகள் மற்றும் சில நேரங்களில் மேய்ச்சல் நிலங்களையும் உள்ளடக்கிய மிகப்பரந்த நிலப்பரப்பு.
2, மரங்கள் நிறைந்துள்ள நிலப்பகுதி பொதுவாக அரசர்களுக்கு உட்பட்டது.
அதி்ல் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கும் விளையாடுவதற்கும் பயன்படுத்திய இடம்.
3. பயிரிடப்படாத பண்படாத ஒரு கானக உபயோகமற்ற நிலம்.

காடுகளின் வகைகள்

இந்திய வனச்சட்டம் காடுகளை மூன்று விதமாக பிரிக்கின்றது.
1. ஒதுக்குக்காடுகள் (Reserved Forest) 2. கிராமக்காடுகள் (Village Forest)
3. பாதுகாக்கப்பட்ட காடுகள் (Protected Forest)
தமிழக சட்டம் (Act XXVII of 1949) பிரிவு 2(a) ன்படி "வனம்" என்பதில் மரங்கள், புதர்கள், மேய்ச்சல் நிலங்களை உள்ளடக்கிய சமுதாய அல்லது சமூக நிலங்கள் (Caste or Communal lands) மற்றும் மாநில அரசால் அரசு விளம்பர அறிவிக்கை மூலம் "வனம்" என்று அறிவிக்கப்படுகின்ற எந்த வேறுவகை நிலங்களும் உள்ளடங்கும்.


தமிழில் காடு என்பது மரங்கள் அடர்ந்த நிலப்பகுதிக்கு உள்ள ஒரு பெயர். தமிழில் காட்டுக்கு கா, கால், கான், கானகம், அடவி, அரண், அரணி, புறவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல் எனப் பல பெயர்கள் உண்டு. இவை தவிர வனம், ஆரணியம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம் என்னும் சொற்களும் வழங்குகின்றன. இவற்றுள் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பொருளில் காட்டைக் குறிக்கும். வியல் என்பது விரிந்து பரந்த பெருங்காட்டைக் குறிக்கும். வல்லை என்பது அடர்ந்த காடு.முளரி என்பது இடர் மிகுந்த காடு. பழவம் என்பது முதிர்ந்த மரங்கள் நிறைந்த காடு. இப்படியாக ஒவ்வொரு சொல்லும், பொதுவாகவோ சிறப்பாகவோ. ஒவ்வொரு பொருள் பற்றி காட்டைக் குறிக்கும்.
வனம் என்பது இயற்கையாக வளர்ந்தவைகளின் தொகுப்பு இதில் பிரதானமாக காணப்படுவது மரங்கள் ஆகும்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “வனம் என்றால் என்ன?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சரியான பதிலை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

மும்பையைச் சேர்ந்த அஜய் மராத்தே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மாநில வாரியாக வனப்பகுதியின் பரப்பளவு மற்றும் 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை ஆகிய தகவல்களை கேட்டிருந்தார்.

அவருக்கு அனுப்பப்பட்ட பதிலில், “வனம் என்பதற்கான விளக்கம் தற்போது தீவிர பரிசீலனையில் உள்ளது. அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.” என்று கூறப்பட்டுள்ளது.

வனம் என்றால் காடு.  சோலை, நீர் உறைவிடம், அழகு, செழிப்பு, நிறம் என்று உயிரினம் வாழ அனைத்தையும் வழங்கும் ஒர் அற்புத இயற்கை படைப்பாகும்.  இந்த இயற்கையின் கொடையைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் தேதியன்று உலக வன நாள் கொண்டாடப்படுகிறது.  பொது மக்களிடத்தில் மரம் நடுவதை ஊக்குவிக்கும் விதமாக இவ்வன நாள் கொண்டாடப்படுகிறது.  உணவு உற்பத்தி மற்றும் மக்கள் தொகை இவ்விரண்டினையும் ஏற்றத் தாழ்வு இன்றி சம நிலை கொள்ள வனம் காத்திட வேண்டும் என்று வலியுறுத்தும் நாள். (1971 ம் வருடம் முதல் உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது).  இந்த பூமியில் உயிரினங்கள் வாழ சாத்தியமாவது வனங்களாலும் மரங்களாலும் மட்டுமே இதற்கு நாம் அனைவரும் நன்றி சொல்வோம்.
“வனநாளை மரம் நட்டு, கொண்டாடுவோம்”
வனத்தை காப்பது அத்தியாவசியமே.  காடுகள்தான் இப்பூமியின் நுரையீரல் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
சுத்தமான காற்று மற்றும் ஆரோக்கியத்தை நாம் வனத்திலிருந்து தான் பெறமுடியும்.

1 comment: