குரங்கணி காட்டுத்தீ 11.03.18

குரங்கணி காட்டுத்தீ    11.03.2018

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் மலையேற்றப்பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணியர் காட்டுத்தீயில் சிக்கினர்.

சமூக வளைதளங்களில் வந்த செய்திகளில் சில
1.
நமது வனப்பகுதி பாதுகாப்பு மற்றும் வன வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தியது மூலம் நாம் வனத்துறைக்கு சேவை செய்து வந்துள்ளோம் தொடர்ந்து சேவை செய்து வருகிறோம் வனத்தாய் நம்மை காப்பாற்றி வருகிறாள்.



ஆனால் இன்று பல மாணவிகள் வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்றவர்கள் எதிர்பாராத விதமாக காட்டுத் தீயில் சிக்கி வெளியேற முடியாமல் தொடர்ந்து உயிருக்கு போராடி வருவதாக தொடர்ந்து வரும் தகவல்கள் மிகவும் வேதனை அளிக்கிறது.

கோடை வெப்பம், இரவு நேரம் தொடர் தீ ஆகியவை களால் பல்வேறு அரசுத் துறைகள் மீட்புப் பணியில் போராடி வரும் நிலையில் முழுமையாக அனைவரையும் இதுவரை மீட்க முடியாத நிலை தொடர்கிறது .

எனவே மேற்படி விபத்தில் சிக்கியுள்ள அனைவரும் எந்த சேதமும் இன்றி காயமும் இன்றி மீட்கப்பட வேண்டும் மீட்புக் குழுவினருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது எனவே வனத்துறையினர் அனைவரும் இவர்களுக்காக வனத் தாயை மனதார வணங்குவோம்
நமது சகோதர சகோதரிகள் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்ற அனைவரும் பிரார்த்திப்போம் நண்பர்களே.
2.
குரங்கிணி மலைப்பகுதியில் காட்டுத்தீ: மீட்புப்பணியில் தொய்வு....விமானப்படை உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரம் (முழு விபரம்)

போடி: குரங்கிணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், இரவில் மீட்புப்பணி மேற்கொள்வது கடினம்,  பணி ஹெலிகாப்டர் மூலம் தொடர்ந்து நடைபெறும். காட்டுப்பகுதியில் தீப்பிடித்த இடங்களை ஆய்வு செய்தபின் மீட்பு பணிகள் துரிதமாக நடக்கும். மருத்துவக்குழுக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். அருகில் உள்ள தனியார் தேயிலை தோட்ட ஊழியர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மாணவிகளின் விவரம்

காட்டுத்தீயில் சிக்கிய பெண்கள் சென்னை மலையேறும் குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சில பேர் ஐ.டி. ஊழியர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை 27 பேர் தேனி அருகே உள்ள கொழுக்குமலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இன்று மாலை திரும்பியிருக்க வேண்டியவர்கள் காட்டுத்தீயில் சிக்கினார்.

காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளது. அவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திவ்யா, மோனிஷா, ரேணு, பார்கவி, சிவசங்கரி, விஜயலக்ஷ்மி, இலக்கியா, சஹானா, சுவேதா, அகிலா, ஜெயஸ்ரீ, லேகா, நிவ்யா, நிவேதா, சாரதா, அணு, ஹேமலதா, புனிதா, சாய் வசுமதி, சுபா ஆகிய 20 பேர் மலையேறும் பயிற்சி மேற்கொள்ள குரங்கிணிக்கு சுற்றுலா வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களில் மோனிஷா, பூஜா, சஹானா, லேகா, ரேணு, விஜயலக்ஷ்மி, நிவேதா, சாரதா ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயில் சிக்கியிருந்தவர்களில் 12 பேர் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட 12 பேரும் திருப்பூரைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது 12 பேரும் காட்டுத்தீயில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 12 பேரில் 3 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்றுள்ளது.   

நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர்

குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை முடுக்கிவிட வனத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். வனத்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் தீ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார். மேலும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மீட்புப்பணியில் விமானப்படை
காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க கோவையில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 2 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவின் பேரில் மாணவிகளை மீட்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. தமிழக முதல்வரின் வேண்டுகோளையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

25க்கும் மேற்பட்டோர் மாயம்

கொழுக்குமலை என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 25க்கும் மேற்பட்ட மாணவிகள் சிக்கியுள்ளனர். மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட போது கல்லூரி மாணவிகள் காட்டுத்தீயில் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயில் சிக்கித் தவிக்கும் மாணவிகளை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள்  சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவிகள் சென்னை, ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

                                         *********************


3.
தேனி மாவட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் மலையேற்றம் சென்று காட்டுத்தீயில் சிக்கிய சம்பவத்தில் இதுவரை தொலைக்காட்சிகள் நேரடி காட்சிகள், கள நிலவரம் அலசுகிறோம் என்ற பெயரில் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கி சென்றார்கள்.

இப்போது அடுத்த கட்டமாக வனத்துறை சரியாக கண்காணிக்கவில்லை.

சோதனைச்சாவடிகள் அமைத்து உள்ளே செல்பவர்களை தணிக்கை செய்யவில்லை.

அல்லது தெரிந்தே உள்ளே அனுப்புகிறார்க்ளா என வித, விதமாக குற்றம் சாட்டும் வகையில் செய்திகளை போட்டு வருகிறார்கள்.

ஒரு வாரத்திற்கும் மேலாக வனத்தீ என்றும் செய்திகள் சொல்லப்படுகின்றன.

அணைக்காமல் மெத்தனம் காட்டுவதாகவும் சொல்கிறார்கள்.

ஒரு வாரமாக அந்த தீயை அணைக்க அல்லது கட்டுப்படுத்த அங்கிருக்கும் பணியாளர்கள் எவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என யாரும் யோசிப்பதில்லை.

இவர்களுக்கு சரியான சாதனங்கள் உள்ளனவா?

காடுகளுக்குள் இன்னும் நாம் இலை, தழைகளை ஒடித்துதானே தீயை அணைக்கிறோம்.

ஓய்வெடுத்து பணியாற்றவோ, இந்த வேலை மட்டும்தான் என்னும் அளவிற்கோ
என்றா நம் பணி உள்ளது.

அய்யா, செய்தி போடுகிறோம் என்று நீங்கள் உங்கள் மனதிலுள்ள எண்ணங்களை வெளியிடும் முன் உண்மை கள நிலவரங்களையும் வெளியிடுங்கள்.

காட்டிற்குள் கும்பலாக வருபவர்களுக்கு உண்மையிலேயே வனத்துறையினர் வந்து யானை உள்ளது, புலி உள்ளது, தீ பிடிக்கும், இப்படி பல்வேறு ஆபத்துகள் உள்ளன என்று சொன்னால்தான்
பாவம் இந்த படித்த மக்களுக்கு தெரியுமா?

சின்ன குழந்தை கூட சொல்லும் காடு என்றால் பயம், ஆபத்து உள்ள்து என்று. அப்படியிருக்க தெரிந்தே எவ்வித அனுமதியும் பெறாமல், தவறு என தெரிந்தே உள்ளே செல்லும் இந்த படித்த அறிவாளிகளை என்னவென்று சொல்வது.

ஆயிரணக்கணக்கான ஹெக்டர் பரப்பிலுள்ள ஒவ்வொறு சுற்று காவல் காட்டினையும்  கண்காணிப்பதும், காவல் காப்பதும்  வெறும் இரண்டு களப்பணியாளர்களும், உதவிக்கு ஐந்தாறு பேர்களும் மட்டுமே என்பதும், அந்த பணியிடங்கள் கூட சரிவர நிரப்பப்படாமல் துறையில் சுமார் 40% களுக்கும் மேல் பணியிடங்கள் காலியாகவுள்ளதும் இவர்கள் அறிவார்களா?

இவர்களது செய்திகளால் நாளை பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் போன்ற இன்னல்களுக்கு ஆளாகப்போவது யார் தெரியுமா? ஏற்கனவே ஒரு வாரத்திற்கும் மேலாக வனத்தீயை அணைக்க குடும்பத்தை விட்டு, சரியான உணவு, நீர், தூக்கமின்றி அங்கு கஷ்டப்படும் களப்பணியாளர்கள் தான்.

உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் உரிய அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்த அந்த மாணவர்களையும், அவர்களை அழைத்து சென்றவர்கள்மீதும் தான். அதோடு இவர்கள் சார்ந்த கல்லூரி மீதும் மாணவர்களை கண்காணிக்காமல் விட்டதற்காகவும், அரசு சட்ட திட்டங்களை மதிக்க கற்று கொடுக்காததற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

அய்யா, ஊடக நண்பர்களே தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 20% எனவுள்ள வனப்பகுதிகளை காவல் காக்கும் களப் பணியாளர்கள் வெறும் 5500 பேர்கள் தான் என்பதையும், இந்த பணியிடங்களிலும் சுமார் 40% காலியாகவே உள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்.
உண்மை இவ்வாறு இருக்க வனப்பகுதி எல்லைகள் முழுக்க சோதனைச்சாவடிகள் அமைப்பதோ, உள்ளே செல்லும் அனைவரையும் பிடித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதோ எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பதை உங்கள் எண்ணத்திற்கே விட்டு விடுகிறேன்.

ஏற்கனவே இரவில் யானைகள் பிரச்சனை, பகலில் வனப்பாதுகாப்புடன் அரசின் திட்டங்களை செயலாக்குதல் உள்ளிட்ட இதர பணிகளையும் சேர்த்து இரவு பகலாக நாட்டுக்காகவும், நாட்டின் சொத்துக்களாம் காடுகளை காக்கவும் செயலாற்றும் எங்கள் மீது விமர்சனங்களை வைப்பதை காட்டிலும், மக்களிடையே வனங்களையும், வன விலங்குகள் குறித்த புரிதல்களையும், தக்க விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவீர்களேயானால் அது உண்மையிலேயே நலம் பயக்கும்.


4.
ஒரு வனக்காவலர் நண்பர் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்ட செய்தி.

"வீக் எண்ட் ஆனா போதும் save nature, மலையை காப்போம்,
climb for health'ன்னு விதவிதமா டீசர்ட் அடிச்சு போட்டுகிட்டு வந்துடுறாங்க.

 நம்ம பெர்மிசன் கொடுக்கலைனா “ அங்கிள், ஆன்ட்டி"ன்னு யாருக்காவது பெரிய ஆபிசருக்கு போன் போட்டு கொடுத்து பெர்மிசன் கொடுக்க வச்சுடுறானுங்க.

 மலையை பத்தியும் தெரியாது,  முதலுதவியும் தெரியாது.
 திடீர்னு ஆபத்துனா என்ன பண்ணனும்னு தெரியாது.
 கூட ரெண்டு இன்ஸ்டன்ட் இயற்கையை காப்போம் கோஷ்டி வேற.  நாங்களும் ஓரளவு தான் சொல்லிப் பார்க்க முடியும்.
 அதுக்கு மேல போய் தொலை சனியனுங்களான்னு விட்ற வேண்டியது தான்."

எனது தாழ்மையான வேண்டுகோள் ....

நீங்கள் முதல் தலைமுறை பட்டதாரியா?  உங்களை நம்பிதான் குடும்பம் உள்ளதா?  ஓரளவு வருமானம் வருகிறதா?

ப்ளூ கலர் சாயம் போட்ட ஜீன்ஸூம்,  பச்சை டையில் சேவ் நேச்சர் ப்ரிண்ட் அடிச்ச டிசர்ட்டும் போட்டு,  இரண்டாயிரம் சிசி டீசல் காரில் ஐநூறு கிலோமீட்டர் புகை கக்கிச் சென்று இயற்கையோடு இணையவோ இயற்கையை காப்பாற்றவோ வேண்டாம்.

 இது போன்ற ஆப்பாயில் இயற்கை கோஷ்டிகளைக் கண்டால் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விடவும்.

அது தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது.

அதற்கு மேலும் உங்களிடம் பணம் இருந்து உதவும் குணமும் இருந்தால் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்து விட்டு,
 மெரினா பீச்சில் குப்பை போடாமல் அரை மணிநேரம் அமர்ந்து செல்லவும்.

ஏனெனில் உங்கள் உடலும் உயிரும் விலைமதிப்பில்லாதது.

Pugal Machendran Pugal
நன்றி Sivakasi Siruvan


5.
உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்திற்கு தலா 4லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.➖ தமிழ்நாடு முதல் அமைச்சர்

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த - காயம் அடைந்த  பல இளம் பெண்கள் அடங்கிய குழுவினரை பகல் இரவு பாராமல் .தீவெப்பம் பாராமல் உயரமான ஏற முடியாத பாதையற்ற கரடு முரடான காட்டு மலைச்சரிவில் தன்னலம் பாராமல் பல்வேறு இன்னல்களுக்கு இடையே உணவு குடிநீர் இல்லாத முட்செடிகள் வழுக்குப் பாறைகள் நிறைந்த பகுதியில் கிராம மக்கள் இளைஞர்கள் மற்றும் பலர் செல்பி போட்டோ எடுக்காமல் தங்கருக்கு சொந்தமான வேட்டி சேலை புடவைகள். போர்வை மூங்கில் மரங்கள் கயிறு எடுத்துச் சென்று மதிப்பிட முடியாத சேவை புரிந்துள்ளனர்

காவல்துறை வனத்துறையினர், மற்றும் பிற அரசுத் துறையினர், அரசியல்வாதிகள்.ஹெலிகாப்டர்கள் ஆம்புலன்ஸ்  வரும் முன் பல உயிர்களை காப்பாற்றிய மனித தெய்வங்களுக்கு மக்கள் அரசு நன்றி செலுத்தாமல் போனாலும் அவர்களது உடமைகளுக்கான இழப்படு வழங்கி அரசு நிதி உதவி வழங்கி பொதுமக்களும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தாரும் வாழ்த்தி வணங்க வேண்டும் இறந்தவர்கள் உடல்கள்  உறவிைனர்களிடம் எப்படி வந்து  சேர்ந்தது என்பதையும் அதன்பின்னால் உள்ள கஷ்டத்தையும் . வலியையும் . மனிதாபிமானத்தையும் இளம் பெண்கள் ஆடைகள் எரிந்து அலங்கோலநிலையில் மலையில் கேட்பாரற்று கிடந்த நிலையில் அவர்கள் மானத்தோடு எந்த ஒருங்கீனமும் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறாமல்    பத்திரமாக வந்து சேர்ந்ததை யாவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்
மீடியாக்கள் இதையெல்லாம் செய்யாது
மக்களே இச்செய்தியை மனிதாபிமானத்துடன் பகிர்ந்து நிவாரணம் உரியவர்களுக்கு கிடைக்க வழி செய்வோம் உதவிய அனைவரையும் நன்றியுடன் வாழ்த்துவோம்

பாலமுருகன் வனத்துறை
 ********************

வனத்துறை களப்பணியில் நேரடி நியமனம் தற்போது தான் நடைபெற்று வருகிறது.  அதுவும் வ.ச.அ மற்றும் வனவர் பணியிடங்கள் மட்டுமே  நிரப்பட்டு வருகிறது  .
தற்போது வ.காப் மற்றும் வ.காவ பணியிடங்கள் நேரடி நியமன செய்து பல வருடங்கள் ஆகிறது.
தோட்டக் காவலர்களை கொண்டு அவர்களது 55 வயதில் வ.காவ பணி நியமனம் செய்துவது தான் கடந்த பல வருடங்கள்  நடைபெற்று வருகிறது .
அதுவும் வனத்தை காக்கும் பணியில் 55 வயது உள்ள வரை வ.காவ யாக அடிப்படை பணியில்  நியமனம்  போது எந்த பலனும் இந்த துறைக்கு கிடைக்கவில்லை.  ஆனால் ஒரு 25 முதல் 28 வயது இளையவனை இப்பணியில் தோட்டக் காவலர் பணி நியமனத்திற்கு இடையே நேரடியாக  சேர்த்திருந்தால் தற்போது நிகழ்ந்த நிகழ்வுகள் நடந்திருக்காது.
இனியாவது இந்த துறையின் உயர்அலுவலர்கள் யோசித்து செயல்பட வேண்டும் .

************************

வனத்துறையை சற்றே கவனியுங்கள்!!!!

தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர். ஆறு பேர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. 'வனத்துறையின் அனுமதியின்றி மலையேற்ற பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அனுமதி பெற்றுதான் மலையேற்றம் மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அனுமதி பெறாமல் சென்றால் எப்படிப் பாதுகாப்பு அளிக்க முடியும். வருங்காலத்தில் இத்தகைய நிபந்தனைகளை மீறுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

1. "குரங்கணி சம்பவம், இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.



நமது காடுளில் மலையேற்றம் என்பது வெளிநாடுகளில் பனிமலை ஏறுவது; பனிச்சறுக்கு ஆடுவது; பாறைகளில் ஏறுவது போன்று சாகசமாக இருக்கக் கூடாது. நமது மேற்கு தொடர்ச்சி மலை உலகில் உள்ள அரிதிலும் அரிதான உயிர்ச்சூழல் வளமை மிகு எட்டு இடங்களில் ஒன்று. இங்கு சாகச மனநிலையோடும் சுற்றுலா செல்லும் மனநிலையோடும் செல்லக் கூடாது. சுற்றுலா என்பது நம்முடைய உணர்வுகளுக்கு இடமளிப்பது. ஆடலாம்; பாடலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சூழல் சுற்றுலா என்பது நாம் மௌனமாக இருந்து இயற்கையை கவனிப்பது, உணர்வது. அரிய வன உயிரின உய்விடம் இது. காடு என்பது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். வனத்துக்குள் நுழையும்போது, அதுகுறித்த அறிவு படைத்தவர்களுடன் செல்வது நல்லது. இயற்கை ஆர்வம் என்பது வேறு; இயற்கை அறிவு என்பது வேறு. நன்கு பயிற்சி பெற்ற வனத்துறை அதிகாரியாக இருந்தாலும் வன ஆய்வாளராக இருந்தாலும், காட்டுக்குள் நுழையும்போது அந்தக் காட்டைப் பற்றி நன்கு அறிந்த உள்ளூர் மக்களுடன்தான் செல்வார்கள்" என விவரித்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் காளிதாசன், மலையேற்றம் என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்களையும் வனத்துறைக்குள் நடக்கும் குளறுபடிகளையும் நம்மிடம் பட்டியலிட்டார்.



2. இயற்கை ஆர்வம் என்ற பெயரில் பலரும் காட்டுக்குள் செல்கின்றனர். வனப்பகுதிக்குள் நுழையும்போது வனத்துறையின் அனுமதி வேண்டும். உள்ளூர் மக்கள் சிலராவது உடன் வர வேண்டும். உள்ளூரில் உள்ள வனப் பணியாளர்களோ வேட்டைத் தடுப்பு காவலர்களோ உடன்வந்தால் இன்னும் சிறப்பு. அவர்களுக்கு அந்தக் காட்டைப் பற்றி நன்கு தெரியும்.
இதுபோன்ற மலையேற்றங்களுக்கு எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்க வேண்டும். 15 பேருக்கு மேல் எண்ணிக்கை கூடக் கூடாது. காட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சாலையில் பயணிக்கும்போது எப்படி விதிகளைப் பின்பற்றுகிறோமோ, அதேபோல் காடுகளுக்கு செல்லும்போதும் விதிகள் உண்டு. காட்டு விதிகளில் மிக முக்கியமானது, பெருங்கூட்டமாகச் செல்லக் கூடாது .காட்டுக்குள் செல்லும்போது உடையின் வண்ணம், ஷு உள்பட அனைத்திலும் கட்டுப்பாடுகள் உண்டு . காட்டோடு ஒன்றிப்போகும் வண்ணங்களிலேயே உடை அணிய வெண்டும். காட்டன் உடைகளை அணிவதே நல்லது; நைலான் உடை தவிர்க்க வேண்டும். குரங்கணி விவகாரத்தில், தீயைக் கண்டதும் பதறிபோய், கையைப் பிடித்துக் கொண்டு பலர் ஓடியிருக்கிறார்கள். அதனால் தடுக்கி விழுந்து அடிபட்டு எழ முடியாமல் கிடந்தவர்கள் தீயில் சிக்கினர். அதிகப்படியான உயிரிழப்புக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. உள்ளுர் வழிகாட்டிகளோடு சென்றிருந்தால் தீயின் வாசமறிந்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்திருப்பர்.

3. கானுயிர் கணக்கெடுப்பு எடுக்கச் செல்லும்போது, விசில் உள்ளிட்ட சில உபகரணங்களைக் கொடுத்து அனுப்புவார்கள். ஏனென்றால், யானை உள்ளிட்ட ஏதாவது வன விலங்குகள் குறுக்கே வந்துவிட்டால், சிதறி ஓடி வழி தவறிவிடுவர்கள் . விசில் அடித்து மற்றவர்களைக் கண்டுபிடித்துவிடலாம். சாலையில் மற்றவர்கள் தவறு செய்தாலும் விபத்து நடக்கும். காட்டில் நாம் தவறு செய்தால் மட்டுமே விபத்து நடக்கும். காட்டைப் பற்றிய அறிவோடு சென்றால், தவறு நடக்க வாய்ப்பில்லை.
குரங்கணி மலையேற்றுக்கு ஏற்பாடு செய்த சென்னை, ட்ரெக்கிங் கிளப் இதற்கு முன்பாக பல இடங்களில் இயற்கை ஆர்வலர்களை வசமாகச் சிக்கவைத்துள்ளனர். அதில், சிலர் இறந்து போய் இருக்கிறார்கள். அது ஓரிரு மரணங்களாக இருந்ததால் வெளியில் தெரியவில்லை. விதிகளை மீறி, இவர்கள் பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். இதே அமைப்பினர் ஆந்திர காடுகளுக்கு இயற்கை ஆர்வலர்களை அழைத்துச் சென்றுள்ளனர். அனுமதியின்றி சென்றதால், ஆந்திர வனத்துறை அதிகாரிகள், இவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டனர். அவர்களில் சிலர், எங்களைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். கர்நாடகாவில் தண்ணீர்கூட இல்லாமல் இயற்கை ஆர்வலர்களைத் தவிக்கவிட்டுள்ளனர். மனஅழுத்தம் ஏற்படக் கூடிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஸ்ட்ரெஸ் ரிலீஃப் என்ற பெயரில் வாரத்தின் இறுதிநாள்களில் ட்ரெக்கிங் அழைத்துச் செல்கின்றனர். குரங்கணி மலையேற்றத்துக்கு, 'மகளிர் தினம் ஸ்பெஷல் ட்ரெக்கிங்' என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்படிச் சென்றுதான் மாட்டிக் கொண்டனர். மலையேற்றம் என்ற பெயரில் செயல்படும் நிறுவனங்களையும் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும்.

4. . குரங்கணி வன பாதையில் செல்ல, அங்கிருக்கும் எஸ்டேட் மக்களுக்கு அனுமதி உண்டு. இதைப் பின்பற்றி சுற்றுலா சென்றவர்களும் சென்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் காட்டின் எல்லையோரம், கேளிக்கை விடுதிகளைக் கட்டுகின்றனர். பண்ணை வீடு என்ற பெயரில் இந்தக் குடில்களைக் கட்டுகின்றனர். நமக்கு மசினகுடியைப் பற்றி மட்டும்தான் இதுவரையில் அறிந்திருந்தோம். பொள்ளாச்சி, ஆனைமலை, சத்தியமங்கலம் என அனைத்துப் பகுதிகளிலும் ரிசார்ட்டுகள் முளைத்துவிட்டன. கட்டடம் எழுப்பிய பிறகு, 'நைட் சஃபாரி வாருங்கள்' என விளம்பரப்படுத்துகிறார்கள். 'ட்ரெக்கிங்', 'கேம்ப் ஃபயர்' எனப் பல பெயர்களை சூட்டியுள்ளனர். இவர்களுக்கு காட்டுக்கு செல்ல அனுமதியும் இருக்காது. அதற்கான அறிவும் இருக்காது. வணிகம் மட்டுமே அவர்களின் நோக்கம். அப்படி போய் யானைகளிடம் சிக்கி இறந்து போன வெளிநாட்டுப் பயணிகளும் உண்டு. இத்தகு கேளிக்கை விடுதிகளை தடுப்பதற்கு நம்மிடம் எந்தவிதச் சட்டங்களும் இல்லை என்பதுதான் வேதனையானது. இப்போது இறந்தவர்கள் அனைவரும், இயற்கை ஆர்வத்தில் சென்றவர்கள். இதற்கு ஏற்பாடு செய்தவர்கள்தான், தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எந்தப் பகுதிக்குச் சென்றாலும், வனத்துறை அனுமதி இல்லாமல் செல்லக் கூடாது என்பதை இயற்கை ஆர்வலர்கள் உணர வேண்டும்.



5. 'இயற்கை சுற்றுலா வேண்டாம்' என்று நாங்கள் சொல்லவில்லை. அதற்கென இருக்கும் முறையான வழிகளைப் பின்பற்ற வேண்டும். கடந்த ஒருவார காலமாகவே, தேனி வனப்பகுதியில் அடிக்கடி தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தீ எரிந்து கொண்டிருக்கும் பகுதிக்கு, 'ட்ரெக்கிங்' என்ற பெயரில் அழைத்துச் செல்கிறார்கள் என்றால், அந்தக் காட்டைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள்தான் இவ்வாறு செய்துள்ளனர். பொதுவாக, நமது காடுகளில் சமவெளிபகுதியில் முற்புதர் காடுகள் நிரம்பியிருக்கின்றன. மலை ஏற ஏற இலையுதிர் காடுகளாக இருக்கும். ஆயிரம் அடிவரை இலையுதிர் காடுகளாகத்தான் இருக்கும். டிசம்பர் மாதத்தில் பனிக்காலம் தொடங்கும்போது, முள்புதர் காடுகளில் உள்ள புல்கள் கருகத் தொடங்கிவிடும். ஜனவரிக்குப் பிறகு இலையுதிர் காடுகளில் உள்ள இலைகள் காய்ந்து விழுந்துவிடும். நம்முடைய காடுகளில் தீ அவ்வளவு எளிதில் இயற்கையாகப் பற்றிக் கொள்ளாது. அனைத்தும் மனிதர்களால் ஏற்படுத்தக் கூடியவைதான். சிகரெட் பற்ற வைக்கும்போது கீழே விழுந்து பற்றிக் கொள்வது ஒருவகை. இரண்டாவது, உள்நோக்கத்தோடு பற்ற வைப்பது. காடுகளில் வசிப்பவர்களுக்கு ஒரு உள்நோக்கம் உண்டு. காடு எரிந்துவிட்டால், புல் நன்றாக முளைக்கும்; ஆடு, மாடுகள் மேய்க்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை. 'விளக்கு மாறு புல் நிறையக் கிடைக்கும்' என்பதற்காகவும் தீ வைப்பது வழக்கம். இதனால், 'மகசூல் கிடைக்காது' என்பதையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். வேண்டும் என்றே தீயைப் பற்ற வைத்துக் கொண்டு, அது கொளுந்துவிட்டு எரிவதை வக்கிரமாகப் பார்க்கும் ஒரு பிரிவினரும் இருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்தில் தீ பற்ற வைக்காமல் தடுக்க, விழிப்பு உணர்வு பிரசாரம் அல்லது நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது


6. தீ பற்றும் வாய்ப்புள்ள பகுதிகளில் அதைத் தடுப்பதற்கு வனத்துறை மூலம் தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு டிசம்பர் மாதமும், ' ஃபயர் வாட்சர்ஸ்' என்ற பணியிடத்தை நிரப்புவார்கள். அவர்கள் தீ கோடுகளை (Fire Line) காட்டுக்குள் உருவாக்குவார்கள். சாலைபோல் 20 அடிவரை சருகுகள் இல்லாமல் காட்டை சுத்தப்படுத்துவார்கள். தீ வந்தாலும் எதிர்த் தீ பற்ற வைத்து, பரவாமல் தடுப்பார்கள். முதுமலை போன்ற பகுதிகளுக்கு நிதி இருப்பதால் இவ்வாறு செய்கின்றனர். தேனி போன்ற காப்புக் காடுகளில் நிதிப் பற்றாக்குறையால் ஃபயர் வாட்சர்ஸ் நியமிக்கப்படுவதில்லை. அந்தவேலைகள் நடப்பதே இல்லை.
ஒரு தீ வந்தவுடன் தகவல் கிடைத்தால்தான் உடனே செல்ல முடியும். வனத்துறைக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு இருந்தால்தான் தீ பற்றிய தகவலே கிடைக்கும். பல இடங்களில் வனத்துறையில் களப் பணியாளர்களே கிடையாது என்பது கூடுதல் சோகம். ஐந்தாயிரம் ஏக்கர் கொண்ட ஒரு வனச்சுற்றுக்கு வனக் காப்பாளர், வனக் காவலர் என இரண்டே பேர்தான் இருக்கிறார்கள். இந்தப் பணியிடங்களில் 50 சதவீதம் இன்னமும் நிரப்பப்படவில்லை. தற்போது இருப்பவர்களில் பெரும்பான்மையினர் 50 வயதைக் கடந்தவர்கள். தீ குறித்த தகவலைப் பெறுவதற்கும் உடனே செல்வதற்கும் பணியாளர்கள் கிடையாது. நவீனத் தொழில்நுட்பங்கள் எவ்வளவு இருந்தாலும், தீ பரவிவிட்டால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது. தீ தடுப்பு நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடலாம்.



7.. குரங்கணி சம்பவம், மதுரை வன மண்டலத்தில் நடந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக, மதுரைக்கு மண்டல வனப்பாதுகாவலரையே அரசு நியமிக்கவில்லை. தகுதிபடைத்தவர்கள் இருந்தும் நிரப்பப்படவில்லை. இது தவறான நிர்வாகத்தையே காட்டுகிறது. மனித உயிர்கள் இறந்ததும் பதை பதைக்கிறோம். ஒவ்வொரு தீயும் நூற்றுக்கணக்கான வன உயிர்களைக் கொல்கிறது. தீ பற்றிய காட்டில் உடனே களைச் செடிகள் பரவிவிடும். காட்டின் தன்மையும் மாறிவிடும். இதனைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு தகுதியுடையதாக வனத்துறை இருக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான்.

8. வேட்டைத் தடுப்பு, தீ தடுப்பு, யானைத் தடுப்பு காவலர்கள் ஏராளமானோர் தேவைப்படுகின்றனர். நிதிப் பற்றாக்குறை என்ற பெயரில் இந்தப் பணியிடம் நிரப்பப்படவே இல்லை. நம்மிடம் ஐந்தில் ஒரு பங்கு காடு இருக்கிறது. வனத்துறையை வருமானம் வராத துறையாக அரசு பார்க்கிறது.ஆகவே இத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி மிகக் குறைவு. நமது பல தலைமுறைக்கான தண்ணீரை, மூச்சுக்காற்றை பாதுகாக்கும் துறையாக அரசு இதைப் பார்க்க வேண்டும். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு எந்த எண்ணிக்கையில் ஆள்கள் நிரப்பப்பட்டார்களோ, அதே எண்ணிக்கையில்தான் இப்போதும் பணியாள்கள் உள்ளனர். காட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சாலைகளைப் போடுகின்றனர். இதனால், விதிமீறி உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. விளைவுகளுக்கு முக்கியக் காரணம் இதுதான். வன உயிர்களின் பார்வையில் இருந்து கவனித்தால்தான், குரங்கணி போன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். வணிக சுற்றுலாவை நோக்கி, சாலைகள் அதிகரிக்கின்றன. இதன் எதிர்கால அபாயத்தை அரசுகள் உணர வேண்டும். " என்றார் மிகுந்த ஆதங்கத்துடன்.

                            ********************

இதுபோன்று பல கருத்துக்கள் மற்றும் எண்ணங்கள் சமூக வளைதளங்களில் காணப்பட்டன. இவற்றை எல்லாம் அரசும், அரசு உயர் அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏதும் ஏற்படாவண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். வனத்துறையினருக்கு வேண்டிய வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். அதே சமயத்தில் வனத்துறையினரும் தங்கள் கடமையை சரிவர முறையாக செய்யவேண்டும். போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். தேவையான அளவிற்கு பணியிடங்களை ஏற்படுத்தவேண்டும். வனம் என்பது வருமானம் ஈட்டக்கூடிய ஒரு துறை அல்ல. நம் வருங்கால சந்ததியினர் வாழத்தேவையான, முக்கியமான ஆக்சிஜனை கொடுக்கின்றன. வனம் இல்லையென்றால் வாழ வழியில்லை என்பதை உணர்ந்து வனத்துறையை நவீனப்படுத்தவேண்டும். 







No comments:

Post a Comment